நீலகிரி: விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நொடிகளை படம்பிடித்தவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் பயன்படுத்திய கைபேசி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
காட்டேரி வனப்பகுதியில்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தளபதி உட்பட 13 பேர் பலியாகினர். விபத்து நிகழ்ந்தபோது திருமண புகைப்படக்காரரான ஜோ என்பவர் அங்குதான் இருந்துள்ளார். மேலும், ஹெலிகாப்டர் கீழே விழும் காட்சியை அவர் தமது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.
அவர் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
தமது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் காட்டேரி பகுதிக்குச் சுற்றுலா சென்றதாகவும் ஆர்வ மிகுதியால் ஹெலிகாப்டரை படம்பிடித்ததாகவும் ஜோ கூறியுள்ளார்.
எனினும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றது ஏன் என்று காவவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அது வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

