புதுடெல்லி: நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பத்தாரும் தங்களுக்கு நிதியுதவி தேவை இல்லை என்றும் நீதிதான் வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
தவறு செய்த ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை இழப்பீடு எதையும் ஏற்கப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுரங்கத் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் கண்ட ராணுவத்தினர், அது தீவிரவாதிகளின் வாகனம் எனக் கருதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு அப்பாவிகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் ஆவேசமடைந்தனர். அவர்கள் மொத்தமாக திரண்டு வந்து ராணுவத்தினரை தாக்க முற்பட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த, பொதுமக்களில் மேலும் ஏழு பேர் பலியாகினர்.
அதன் பிறகு நிகழ்ந்த மற்றொரு வன்முறைச் சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தாா்.
இதையடுத்து பலியானவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர்.
14 பேர் உயிரிழக்கக் காரணமான ராணுவ வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாகாலாந்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
மேலும், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

