புதுடெல்லி: இந்தியா எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை என்றும் பிற நாடுகளின் ஓர் அங்குல நிலத்தைக் கூட இந்தியா ஆக்கிரமித்தது இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (படம்) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான நேரடிப் போரில் வெற்றிபெற்ற இந்தியா, அந்நாட்டுடனான மறைமுகப் போரிலும் வெற்றிபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆனதையடுத்து, நேற்று முன்தினம் டெல்லியில் பொன்விழா கொண்டாட்டம் எளிய முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் கொண்டாட்ட வேளையில், முப்படைத் தளபதி பிபின் ராவத்தை நாடு இழந்திருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், 1971 போருக்குப் பிறகு பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போரில் ஈடுபட்டு வருவதாகச் சாடிய அவர், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்துக்கு எதிரான மறைமுக போரிலும் இந்தியா வெற்றிபெறும் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பாகிஸ்தான் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும் தனது ராணுவ ஏவுகணைகளுக்குப் பாகிஸ்தான் பெயர் சூட்டியிருப்பதை வைத்தே இதை நன்கு அறிய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கவ்ரி, காஸ்னவி, அப்தாலி என்று இந்தியா மீது படையெடுத்தவர்கள் பெயர்களையே பாகிஸ்தான் தனது ஏவுகணைகளுக்குச் சூட்டியுள்ளது. இவர்கள் பாகிஸ்தான் நிலப்பரப்பின் மீதும் படையெடுத்தவர்கள் என்பதை நினைவூட்டுகிறேன்," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பயங்கரவாதத்தையும் சமூக விரோதச் செயல்களையும் தூண்டிவிடுவதன் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், 1971ஆம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானின் திட்டங்களை முறியடித்ததுபோன்று இப்போதும் பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய வீரர்கள் தங்களது வீரத்தை முழுமையாக வெளிப்படுத்தியதாகவும் அது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போர் என்பது அநீதிக்கு எதிரானது என்று தெரிவித்த அவர், அந்தப் போரில் நீதிக்கு வெற்றி கிடைத்தது என்றார்.
"அந்தப் போரின்போது வெளிநாட்டு மண்ணில் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை, வெளிநாட்டின் எந்தப் பகுதியையும் இந்தியா அபகரிக்கவில்லை," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

