புதுடெல்லி: ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக கூடியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நாக்பூரில் 40 வயது ஆடவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவிலும் ஒரு தொற்றுச் சம்பவம் பதிவானது.
லண்டனில் இருந்து எர்ணாகுளம் வந்த பயணி ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் விமானத்தில் வந்த 149 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி, இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18 பேரும் ராஜஸ்தானில் ஒன்பது பேரும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருவர், குஜராத், கர்நாடகாவில் தலா மூவர், ஆந்திரா, கேரளா, சண்டிகரில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் புதிதாக 7,350 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றாட பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91,456 ஆக குறைந்துள்ளது.