புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள சிறார்களுக்கு மருந்துகளை அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு அங்குள்ள தலிபான் நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மருந்துக் கருவிகளும் கொண்டு வரப்பட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என தலிபான் செய்தித்தொடர்பாளர் அஹ்மத்துல்லாஹ் வாசிஹ் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காபூல் நகரில் இருந்து புதுடெல்லி வந்தடைந்த விமானத்தில் ஆப்கானில் இருந்து 104 சீக்கியர்களும் இந்துக்களும் அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் காபூலுக்கு திரும்பியபோது, 1.6 டன் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியா அனுப்பி வைத்துள்ள இம்மருந்துகள் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதையடுத்து, அங்குள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு இந்தியா மனிதநேய அடிப்படையில் மேற்கொண்ட முதல் முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிக முக்கியமானது என தலிபான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பால்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இருந்து 85 ஆப்கன் குடிமக்கள் அழைத்து வரப்பட்டதாகவும் இந்த பயண நடைமுறை நீடிக்கும் என்றும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் நிர்வாகத்தை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவப்போவதாக தெரிவித்திருந்தது.
முன்னதாக, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஐம்பதாயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பி உள்ளது.