புதுடெல்லி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்காக குடிமக்கள் செய்யும் தொழிலைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப, ஆதார் அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது அந்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு வேளையில் மற்ற பிரிவினரைப் போல் பாலியல் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவரங்களைக் குறிப்பிட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் மூலம் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேற்குறிப்பிட்ட உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டிலேயே பிறப்பிக்கப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

