லக்னோ: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மூன்றாம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா. அப்போது அவரை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவ்வழியே வந்த அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் திடீரென அதிவேகத்தில், அங்கு திரண்டிருந்த விவசாயிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. கார் மோதியதில் நான்கு விவசாயிகள் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையில் முடிந்தது. வன்முறைச் சம்பவங்களில் மேலும் நான்கு பேர் பலியாகினர்.
இது தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை சரியாக நடத்தவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அதில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றனர்.
வன்முறைச் சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் காரணம் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆஷிஷ் கைதானார். மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவானது.
அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது பல்வேறு உண்மைகள் வெளிப்பட்டன.
விவசாயிகள் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் கைதானவர்கள் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்கள் போன்றவற்றால் கொடூர காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் வித்யாராம் திவாகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் பிரிவுகள் மாற்றப்பட்டிருப்பதற்கு, அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன.
விவசாயிகளின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் காவல்துறையை ஆளும்தரப்பு பயன்படுத்திக்கொள்வதாக அவை விமர்சித்துள்ளன.

