புதுடெல்லி: ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, ரேக்ளா பந்தயம் (மாட்டு வண்டி) உள்ளிட்டவைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் சட்ட திருத்தங்களை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு மற்றும் காளை விரட்டு விளையாட்டுகளை நடத்தி வருகிறது.
இந்தச் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மராட்டியத்தில் 'ரேக்ளா' பந்தயம் நடத்த அனுமதி கேட்டு அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மராட்டிய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதிகள், ரேக்ளா பந்தயத்திற்கு உரிய விதிகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கினர்.

