புதுடெல்லி: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி இடையேயான பேச்சுவார்த்தை பல்வேறு வகையிலும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பார்லி, பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஆப்கானிஸ்தானின் அண்மைய நிலவரம், பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாதம், சீனாவின் எல்லை ஊடுருவல்கள் ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாக இருந்தன என்றும் இருதரப்பு வியூக உறவுகளை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தியா, பிரான்ஸ் இடையேயான பாதுகாப்புத் துறை தொடர்பான இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவில் உற்பத்தி ('மேக் இன் இந்தியா') செய்வது குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்பட்டது.
என்றும் இது தொடர்பாக இந்திய நிறுவனங்களுடன் பிரான்ஸ் முன்னணி நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து செயல்படலாம் அல்லது தத்தம் நாடுகளில் உற்பத்தி அமைப்புகளை நிறுவலாம் என்பது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
பிரான்சிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா.
இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் பல விமானங்களைத் தர பிரான்ஸ் தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் பார்லி, 'மேக் இன் இந்தியா' முன்னெடுப்புக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை மிகச் சிறப்பாக அமைந்தது என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் முன்னைவிட மிகப் பொருத்தமானதாக உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

