வி.கே.பால்: பிரிட்டனைப் போல் இந்தியாவில் ஓமிக்ரான் பரவாமல் தடுக்க வேண்டும்
புதுடெல்லி: ஓமிக்ரான் பாதிப்பு பிரிட்டனில் பரவியதுபோல் இந்தியாவில் பரவும் பட்சத்தில், நாள்தோறும் சுமார் 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என கொரோனா பரவல் தடுப்புக் குழுவின் உறுப்பினரான மருத்துவர் வி.கே.பால் கணித்துள்ளார்.
உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா கிருமியின் உருமாறிய வகைகளில் ஒன்றான ஓமிக்ரான் பிரிட்டனில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு சுமார் 94,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 11 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவியுள்ள நிலையில், இதுவரை 113 பேருக்கு அத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பாவில் ஓமிக்ரான் பரவும் வேகத்தை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு சில கணிப்புகளைத் தெரிவித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார் வி.கே.பால்.
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டனிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் உள்ள ஓமிக்ரான் பாதிப்பு தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் ஓமிக்ரான் பாதிப்பு விட்டுவைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் கடந்த இருபது தினங்களாக அன்றாட தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ள போதிலும், அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றார்.
பிரிட்டனில் கடந்த வியாழக்கிழமை 80,000 பேருக்கும் வெள்ளிக்கிழமை 93,045 பேருக்கும் கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

