புதுடெல்லி: உலகை அச்சுறுத்தி வரும் 'ஐஎஸ்ஐஎஸ்' பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 66 பேர் இடம்பெற்றுள்ளனர். இத்தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு, ஆண்டுதோறும் தீவிரவாதம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க இந்திய வம்சாவளியினர் 66 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்து வதில் அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் பல்வேறு நிலைகளில் இருநாடுகளும் தீவிரவாதத்தை வேரறுப்பதில் இணைந்து செயல்படுவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த, வட்டார தீவிரவாத சக்திகளைக் கண்டறிந்து அவற்றை ஒடுக்குவதில் இந்தியாவின் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் செயல்பாட்டைப் பாராட்டி உள்ள அமெரிக்கா, இந்திய அரசின் தீவிரவாத எதிர்ப்புப் படைகளும் சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, மத மோதல்களைத் தூண்டுவதற்கு இணையத்தைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.
இவற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அண்மைக்காலமாக ஐஎஸ் காஷ்மீர் என்ற அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசைத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் தீவிரவாதம் தொடர்பான புதிய ஆண்டறிக்கை முக்கிய தகவல்களுடன் வெளிவந்துள்ளது.

