புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் டிசம்பர் 9ஆம் தேதி காலையில் அறை எண் 102-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் மூத்த விஞ்ஞானி பாரத் பூஷண் கட்டாரியா என்பரைக் கைது செய்துள்ளனர். இந்த விஞ்ஞானி இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணிபுரிந்து வந்தவர்.
இது தொடர்பாக டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் இது குறித்து விவரித்தார். வெடிகுண்டைத் தயாரிக்க எளிதில் கிடைக்கும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் டெட்டனேட்டர் மட்டுமே வெடித்துள்ளது. வெடிபொருள் வெடிக்கவில்லை. அது வெடித்திருந்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று திரு ராகேஷ் கூறினார்.
வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த கையடக்கக் கணினிப் பையில் டெல்லியில் குடோன் வைத்திருக்கும் மும்பை நிறுவனத்தின் லோகோ இருந்தது. அந்த நிறுவனம் விசாரணைக்கு உதவியது. இதன் அடிப்படையில் டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானி பாரத் பூஷண் கட்டாரியா கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கட்டாரியாவுக்கும் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் அமித் பக்சி என்ற வழக்கறிஞருக்கும் குடிநீர் சப்ளை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அமித்பக்சியைக் கொல்வதற்காக நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிபொருட்களை, கட்டாரியா கொண்டு வந்துள்ளார்.
வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி மருந்துகளை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை ஆணையர் ராகேஷ் கூறினார்.

