புதுடெல்லி: இந்தியாவில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் வாராந்திர பணி நாள்கள் 4ஆக குறைக்கப்படும் என்றும் மாதாந்திர ஊதியத்தில் மாற்றம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், பணியிடப் பாதுகாப்பு ஆகிய நான்கு அம்சங்கள் தொடர்பில் அடுத்த நிதியாண்டு (2022) முதல் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலை மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய சட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் தொழிலாளர்கள் வாரந்தோறும் நான்கு நாள்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதுமானது.
அதேசமயம் அன்றாட பணி எட்டு மணி நேரம் என்பது இனி 12 மணி நேரமாக அதிகரிக்கப்படும்.
மேலும், அனைத்து பிடித்தங்களும் போக, கைக்கு வரும் ஊதியம் குறையும் என்றும் ஊழியர் சேம நிதி தொடர்பில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தினமும் 12 மணி நேரம் பணியாற்றினால் மட்டுமே வாரந்தோறும் ஒரு தொழிலாளர் 48 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற விதிமுறையை ஈடேற்ற முடியும் என புதிய சட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததும் தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை ஊதியம், சேம நிதி ஆகியவற்றைக் கணக்கிடும் முறையில் பெரிய மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொழிலாளர்கள் நலன் என்பது மாநில அரசுகளும் சம்பந்தப்பட்டது என்பதால், இந்தப் புதிய சட்ட விதிமுறைகள் பற்றி மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு கருத்துகளையும் திருத்தங்களையும் தெரிவிக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான வரைவு விதிமுறைகளைப் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி (2021) மாதமே இந்தப் பணியை முடித்துவிட்டதால், மத்திய, மாநில அரசுகள் ஒரே சமயத்தில் இந்த சட்ட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் தொழிலாளர்கள் வாரந்தோறும் ஐந்து நாள்கள் பணிபுரிகின்றனர். புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், அவர்களின் பணிக்கலாசாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய சட்ட விதிமுறைகளின் சாதக, பாதக அம்சங்கள் குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன.

