ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடுவதாக காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 33 நாள்களில் ஸ்ரீநகர் பகுதியில் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இம்மூன்று தீவிரவாதிகளும் காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இம்மூவரும் பல அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே மாதத்தில் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடுகிறது என்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
நேற்று முன்தினம் காஷ்மீரின் ஸ்ரீநகர் ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது அங்கு பதுங்கி இருந்த சபியுல்லா என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
அவன் பாகிஸ்தானின் கராச்சி பகுதியைச் சேர்ந்த லஷ்கர் - இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்பதும் காஷ்மீரில் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவன் என்றும் தெரியவந்துள்ளது.

