புதுடெல்லி: இந்தியாவில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பை எதிர்த்துப் போராட நாடு தயாராக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொரோனா நிலவரம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அவர், ஓமிக்ரான் பாதிப்பை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்த அவர், நாடு முழுவதும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் மருத்துவ உயிர்வாயு உருளைகளும் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், மாநிலங்களுக்கு இதுவரை 48,000 செயற்கை சுவாசக் கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 77 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மாநிலங்களில் ஆக அதிகமாக, மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் 20 பேர், கர்நாடகாவில் 19 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கேரளாவில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குஜராத்தில் 14 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் ஒடிசாவிலும் தலா இருவர் அதே தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பிற மாநிலங்களில் தலா ஒருவரை ஓமிக்ரான் பாதித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
இதற்கிடையே, ஓமிக்ரான் அச்சம் காரணமாக குஜராத்தில் இரவுநேர ஊடரங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அங்கு 31ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

