புதுடெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் ஓமிக்ரான் பரவல் வேகமாகி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரிகள், வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்போவதாக நேற்று அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.
இவ்வேளையில், நாட்டில் ஓமிக்ரான் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 213 ஆகிவிட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.
அவர்களில் 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும் 123 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
பண்டிகைக் காலம் வருவதால் தொற்று வேகமாகப் பரவும் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஓமிக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இன்று விவாதிப்பார் என்று தகவல்கள் கூறின.
மகாராஷ்டிரா, புதுடெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத்தில் ஓமிக் ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தல் கொரோனா தொற்றும் கொஞ்சம் கூடி புதிதாக 6,317 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 318 பேர் பலியாகிவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
இவ்வேளையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதிஉள்ள கடிதத்தில், டெல்டாவை விட ஓமிக்ரான் தொற்று மூன்று மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தார்.
இந்தியாவில் 3வது அலை தவிர்க்க இயலாதது என்றும் என்றாலும் அளவுக்கு அதிக அச்சம் தேவையில்லை என்றும் இந்திய வல்லுநர்கள் கூறி இருக்கிறார்கள்.