தியோகர்: ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 14 வயது சிறுவனை நண்பர்களே கொன்று உடலை காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர்.
சிறுவன் காணாமல் போனதாக அவனுடைய பெற்றோர் புதன்கிழமை அன்று காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரி பவன்குமார் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் சிறுவனின் நண்பன் குமார் மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நண்பனுக்கும் வயது 14 என்று காவல் அதிகாரிகள் கூறினர்.
விசாரணையில் ெசவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியளவில் ரோஹினி கிராமத்தில் வீட்டுக்கு வெளியே சிறுவனைச் சந்தித்ததாகவும் கும்ரபாத் ஸ்டேஷன் ரோட்டுக்குச் சென்றபோது அவினாஷ் எனும் மற்றொரு நண்பன் சேர்ந்துகொண்டதாகவும் குமார் தெரிவித்தான்.
பலங்கா பஹாத் காட்டுப் பகுதி வழியாகச் சென்றபோது சிறுவனுக்கும் அவினாஷ்க்கும் வாக்கு வாதம் மூண்டது. அப்போது அவினாஷ் கத்தியை எடுத்து சிறுவனைக் குத்தி, கழுத்தை அறுத்து விட்டான். சிறுவனைக் கொன்றபிறகு கை, கால்களை வெட்டி மூன்று மூட்டைகளாகக் கட்டி காட்டில் அவினாஷ் வீசிவிட்டான் என்று குமார் கூறினான்.
இதையடுத்து சிறுவனின் சடலத்தை மீட்டு அவினாஷை காவல்துறையினர் கைது செய்தனர் என்று என்டிடிவி தகவல் தெரிவித்தது. ரத்தம் தோய்ந்த கத்தி, சிறுவனின் கைபேசி உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் ஆதாரமாக மீட்டுள்ளனர்.
குற்றத்தை அவினாஷ் ஒப்புக் கொண்டதால் அவன் மீது கொலை குற்றம் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் எனத் தெரிகிறது.

