சல்மான் கானை பாம்பு கடித்தது
புதுடெல்லி: இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், தமக்குச் சொந்தமான பண்ணை வீட்டிற்குச் சென்றபோது அங்கு அவரைப் பாம்பு கடித்துவிட்டது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்ற இடத்தில் அவருக்குச் சொந்த மான பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் அந்த வீட்டில் இருந்துகொண்டு விவசாய, தோட்டப் பணிகளில் சல்மான் கான் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை மூன்று மணியளவில் சல்மான் கானை பாம்பு கடித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக இவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து நேற்று காலை சல்மான் கான் வீடு திரும்பிவிட்டார். இன்று தனது 56வது பிறந்த நாளை சல்மான் கான் கொண்டாடவிருக்கும் நிலையில் அவரை பாம்பு கடித்துள்ளது.
பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவனது பெயர் பஹீம் பாத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்தப் பயங்கரவாதிக்கு பிஜ்பேகாரா காவல் நிலையத்தைச் சேர்ந்த முகமது அஷ்ரப் என்ற காவல் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பிருக்கலாம் என காஷ்மீர் காவல்துறை சந்தேகிக்கிறது.
டெல்லியில் காற்றின் தரம் மோசம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காற்று தரக் குறியீடு 430ஆக பதிவாகி இருப்பதாக காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 375ஆகவும் நொய்டாவில் 570ஆகவும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகி உள்ளது.
காற்று தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள்.
100க்குள் இருக்க வேண்டிய காற்று தரக் குறியீடு அளவு, தொடர்ந்து 400க்கும் மேல் பதிவாகி வருவதால் தலைநகரில் வசிக்கும் மக்கள், பொதுமுடக்கம் அமலில் இருப்பதுபோல வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன் படுத்த வேண்டும் என்றும் சைக்கிளை அதிகம் பயன் படுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

