புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் 29 ஆண்டுகள் அடைக்கப்பட்ட குல்தீப் சிங் என்பவர் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்துக்குத் திரும்பி உள்ளார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள மக்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங்.
பாகிஸ்தானில் வேலை பார்த்து வந்தபோது உளவு பார்த்ததாக 1992ல் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல் இல்லை. அவரது குடும்பத்தினர் தவியாய்த் தவித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் லாகூர் சிறையில் இருப்பது தெரிய வந்தது.
அப்போது, தனக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குல்தீப் சிங் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக குல்தீப் சிங்கிடம் இருந்து தகவல் இல்லை. இதனால் சிறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் 29 ஆண்டு களுக்குப் பிறகு 53வது வயதில் குல்தீப் சிங் அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு பட்டாசுகள் வெடித்து, மலர்களைத் தூவி உள்ளூர் மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

