புதுடெல்லி: தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
புத்தாண்டு, பொங்கல், மகர சங்கராந்தி என பண்டிகை, விடுமுறை நாள்கள் வருவதால், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம் என்பதால் மாநிலங்களே கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து டெல்லியிலும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 156 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டிலேயே ஆக அதிகமாக டெல்லியில் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 141 பேருக்கும் கேரளாவில் 57 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது.
இதையடுத்து, உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அசாம் மாநிலங்கள் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கர்நாடகாவில் இன்று முதல் அடுத்த பத்து நாள்களுக்கு இரவு நேர ஊடரங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து டெல்லி அரசும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விருந்து, கொண்டாட்ட நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் வாய்ப்புள்ளதால் அவற்றின் மூலம் தொற்றுப்பரவல் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

