போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மக்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் ஊதியத்துடன், தனது ஊதியத்தையும் தரவேண்டாம் என்று நிறுத்திவைத்துள்ளார் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா (படம்).
கடந்த திங்கள்கிழமை முதல்வரின் 'ஹெல்ப்லைனில்' நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். இதில் ஏராளமான புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கடும் கோபத்துக்கு ஆளான அவர், டிசம்பர் மாதத்திற்கான தனது ஊதியத்துடன் மற்றும் சில உயரதிகாரிகளின் ஊதியத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
100 நாள்களுக்கு மேல் நிலுவையில் உள்ள புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
நகரங்களில் தூய்மை தொடர்பாக அலட்சியம் காட்டியதற்காக துணை நகராட்சி ஆணையர்களுக்கும் வருவாய்த்துறை வழக்குகளில் அலட்சியம் காட்டியதற்காக சில தாசில்தார்களுக்கும், பல்வேறு வழக்குகளைக் கையாள்வதில் மெத்தனமாக செயல்பட்டதற்காக செயல் பொறியாளர் பிஐயு (திட்ட அமலாக்கப் பிரிவு) ஆகியோரின் அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்துப் புகார்களையும் தீர்வு காண டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ள ஆட்சியர் கரம்வீர் சர்மா தவறினால் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இவரது நடவடிக்கைக்கு மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பாராட்டுகள் குவிந்துள்ளன.

