கம்பம்: தமிழகத்தில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய கேரள அரசின் வேளாண் துறை 'கார்டி கிராப்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகத்திலிருந்து காய்கறி, பலசரக்கு, பால், கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்ட பொருள்களை கேரளா பெருமளவில் வாங்குகிறது.
ஒட்டன்சத்திரம், கம்பம், தேனி, தென்காசி பகுதிகளில் இருந்து தினமும் 100 டன் வரை காய்கறி கேரளா செல்கிறது. இந்தக் காய்கறி விற்பனையில் பல இடைத்தரகர்கள் உள்ளனர். இதனால் கேரளத்தில் விலை பல மடங்கு உயர்ந்தது.
இதைத் தடுக்க கேரள வேளாண்துறை கார்டி கிராப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு தமிழக பெரிய சந்தைகளில் இருந்து காய்கறியை நேரடி கொள்முதல் செய்து கேரளாவில் நியாயமான விலையில் விற்கத் துவங்கியது. இது இடைத்தரகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்த முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்தில் கிலோ ரூ.40க்கு விற்கும் கொத்தமல்லித் தழை அங்கு ரூ.140, கத்தரிக்காய் ரூ. 110 என இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது.
இதனால் தங்கள் கொள்முதல், விற்பனையை அதிகரிக்க கேரள அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

