புதுடெல்லி: இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் இனி இந்திய இசையை ரசிக்கலாம். இந்திய கலாசார ஆய்வுக் குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு "இந்தியாவின் இசை இந்திய மக்களின் சமூக, மத வாழ்வின் ஓர் அங்கமாகச் செயல்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் விமான சேவைகள், தத்தம் நாடுகளின் இசையையே தங்களின் விமானங்களில் இசைக்கின்றனர். அமெரிக்க விமானங்களில் ஜாஸூம், ஆஸ்திரிய விமானங்களில் மொசார்ட்டும், மத்திய கிழக்காசிய நாடுகளின் விமான சேவைகளில் அரபி இசையும் இசைக்கப்படுகிறது. ஆனால் இந்திய விமான சேவைகளில் எப்போதாவது மட்டுமே இந்திய இசை பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இசை உயர்ந்த பண்பாடு மற்றும் கலாசாரத்தைக் கொண்டுள்ளது. இதனை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்தின் கூடுதல் செயலாளர் உஷா பாதீ, விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.