புதுடெல்லி: செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி மின்னிதழ்கள், பிடிஎஃப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிப்புரிமைச் சட்டம், வர்த்தக முத்திரைகள் சட்டம் ஆகியவற்றின்படி, தனிநபர்கள் மின்னிதழ்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக்கூடாது.
அதன்படி, சமூக வலைதளக் குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இந்தி மொழியில் வெளியாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித்தாள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்களது செய்தித்தாளின் மின்னிதழை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மின்னிதழ்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

