துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏறவிருந்த பெண் பயணி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது சோதனையில் உறுதியானதால் அவர் விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்படவில்லை.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாயில் வசிக்கும் அந்தப் பெண், இரு வேறு தடுப்பூசிகளை நான்கு முறை போட்டுக்கொண்டவர்.
“விமானப் பயணத்திற்கு முன்பாக பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 89 பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்தப் பெண் பயணிக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,” என்று இந்தூர் சுகாதாரத் துறை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரியங்கா குராவ் தெரிவித்தார்.
துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்பு அந்த 30 வயது பெண் இந்தியா வந்திருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், மஹவ் நகரில் உள்ள தம்முடைய உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக அவர் இந்தியா வந்திருந்தார்.
ஏற்கெனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கொவிட்-19 தடுப்பூசிகளை அவர் நான்கு முறை போட்டுக்கொண்டுள்ளார்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான இடைவெளியில் அந்தப் பெண், சீனத் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசியை இரண்டு முறையும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டு முறையும் போட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இந்தூரில் இருந்து விமானம் மூலம் அவர் துபாய் செல்லவிருந்தார்.
இந்தூர் விமான நிலையத்துக்கு அவர் வந்தவுடன் அங்கு அவருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யபப்ட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.