இந்தூர்: துபாய் செல்லும் ஏர் இந்திய விமானத்தில் ஏறவிருந்த பெண் பயணி ஒருவருக்கு தொற்று இருப்பது சோதனையில் உறுதியானதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாயில் வசிக்கும் அந்தப் பெண் பயணி, நான்கு முறை வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளார்.
"இந்தூர்-துபாய் விமானப் பயணத்தின்போது பயணிகளுக்கு வழக்கமான கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 89 பயணிகளிடம் ேசாதனை நடத்தப்பட்டது. அதில் பெண் பயணிக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது," என்று பிடிஐக்கு அளித்த ேபட்டியில் இந்தூர் சுகாதாரத் துறை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரியங்கா குராவ் தெரிவித்தார்.
துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்பு 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.
ஏற்கெனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கொவிட்-19 தடுப்பூசிகளை அவர் 4 முறை போட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான இடைவெளியில் அந்தப் பெண் சீனத் தயாரிப்பான சினோஃபாம் தடுப்பூசியை இரண்டு முறையும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டு முறையும் போட்டுள்ளார்.
இந்த நிலையில் மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இந்தூரில் இருந்து விமானம் மூலம் அவர் துபாய் செல்லவிருந்தார்.
நேற்று முன்தினம் அவர் இந்தூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கொவிட்-19 சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.