அமராவதி: நாட்டின் சில பகுதிகளில் புறாக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள சீட்டுகள் அல்லது வேறு சிறிய ரக பொருள்களில் சீன எழுத்துகளுடன் கூடிய ரகசிய குறியீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை தகவல்களைத் திரட்டி வருகிறது.
நேற்று முன்தினம் ஆந்திராவின் ஓங்கோல் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு புறா தஞ்சமடைந்தது. அங்குள்ளவர்கள் அதைப் பிடித்தபோது, அதன் காலில் சீன ரகசியக் குறியீடு காணப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தக் குறியீட்டில் 'ஏஐஆர் 2022' எனவும் சில சீன எழுத்துக்களும் காணப்பட்டன.
இதேபோல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் சாலையில் அடிபட்டுக் கிடந்த புறாவைப் காப்பாற்ற முயன்றுள்ளார் சர்பேஷ்வர் என்ற இளையர். அந்தப் புறாவின் காலிலும் சீன எழுத்துக்களைக் கொண்ட ரகசியக் குறியீடு காணப்பட்டது.
இந்தப் புறாக்கள் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டன என விசாரணை நடக்கிறது.