லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருகிறார்கள்.
இதுவரை இரண்டு மாநில அமைச்சர்களும் ஏழு எம்எல்ஏக்களும் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். இதனால் அக்கட்சித் தலைமை கடும் நெருக்கடியில் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
ஆளுங்கட்சியான பாஜக பலத்துடன் இருப்பதாகவும் முக்கிய எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் பலவீனமாக உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முதல்வர் யோகிநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா, திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த துடன் நிற்காமல், முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் முக்கியத் தலைவராக வலம்வரும் இவரது விலகல், பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
இந்நிலையில், இந்து கடவுள் குறித்து தவறாகப் பேசியதாக, சுவாமி பிரசாத் மவுரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தபோது அவர் இவ்வாறு பேசியதாகக் கூறி இப்போது கைது செய்ய நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான தாரா சிங் சவுகானும் அக்கட்சியில் இருந்து விலகி, தம்மை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என அவர் சாடியுள்ளார்.
இரு அமைச்சர்களைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான ஏழு எம்எல்ஏக்களும் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.