லக்னோ: யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து ஆளும் தரப்பிலிருந்து எம்எல்ஏக்கள் விலகி வருவதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வலுப்பெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் அதனைக் கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் மல்லுக்கட்டி வருகின்றன.
இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையிலிருந்து பாஜக முன்னாள் தலைவரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சுவாமி பிரசாத் மவுரியா,68, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகியோருடன் நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இதற்கு முன்பு ஆயுஷ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி பதவி யிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அவர் சந்தித்தார்.
சமாஜ்வாதி கட்சிக்கு அவரை வரவேற்கிறேன் என்றும் அகிலேஷ் யாதவ் டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவி விலகுவது பாஜகவிற்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.

