புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு அண்மையில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, கார்கேவுக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
"மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டுத்தனிமையில் அவர் இருந்து வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று மல்லிகார்ஜுன கார்கேவின் உதவியாளர் ரவீந்திர கரிமெல்லா அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லிக்கு, 82, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த அவர், "கடந்த புதன்கிழமை லேசான காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதால் 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்,'' என்றார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத் தொடர் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இம்மாதம் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனையில் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ தகவல் தெரிவித்தது.

