புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சதி வேலை இருக்கக் காரணமில்லை என்று முப்படை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படை விசாரணைக் குழுவினர் விசாரித்து வந்தனர்.
இந்தக் குழு சம்பவ இடத்துக்குச் சென்றும் விசாரணை நடத்தியது. இதையடுத்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மற்றும் களத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப் பட்டது. இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம், இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவை விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தது என்று தெரிய வருகிறது. இந்த நிலையில் விசாரணை அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், "விசாரணையின்படி இயந்திரக் கோளாறோ அல்லது சதி வேலையோ விமானியின் கவனக் குறைவோ விபத்திற்குக் காரணம் இல்லை.
"திடீரென வானிலை மோச மடைந்தபோது ஹெலிகாப்டர் அந்த மேகமூட்டத்துக்குள் சிக்கியது. இதனால் விமானம் திசைமாறி 'Controlled Flight into Terrain (CFIT) என்ற ரீதியில் எதிர்பாராமல் தரையில் விழுந்து நொறுங்கியது," என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

