அமராவதி: மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசினார் சிரஞ்சீவி. அப்போது சிரஞ்சீவிக்கு ஆந்திர முதல்வர் மதிய விருந்து அளித்ததாகவும், சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்க விருப்பம் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.
இதனால் ஆந்திர அரசியல் களத்தில் புதிய பரபரப்பு நிலவியது. ஆனால், தமக்கும் முதல்வருக்கும் இடையேயான சந்திப்பை வைத்து சிலர் அரசியல் நடத்துவதாக சிரஞ்சீவி சாடி உள்ளார். ஆந்திர திரையுலகத்தின் எதிர்காலம் தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததாகவும் திரையுலகம் தொடர்பான விஷயங்கள் குறித்து மட்டுமே தாம் விவாதித்ததாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
"சிலர் உண்மையைத் திரித்து பொய்த் தகவல் பரப்புகின்றனர். நான் மீண்டும் அரசியலுக்கும் சட்டமன்றத்துக்கும் வர மாட்டேன். தயவுசெய்து யூகங்களைச் செய்தியாக ஒளிபரப்ப வேண்டாம்," என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.

