இந்திய பயணிகளில் 61 விழுக்காட்டினர் உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்கே செல்ல விரும்புவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஹோட்டல் முன்பதிவு இணையத்தளங்களில் ஒன்றான OYO, இந்தியர்களின் பயண விருப்பம் குறித்து அறிய, கடந்த டிசம்பரில் கிட்டத்தட்ட 3,000 பேரிடம் ஆய்வு நடத்தியது.
அதில், பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குப் பதிலாக உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்கே செல்ல விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வைப் பொறுத்தவரை, கோவா, இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி ஆகியவை பயணிகளின் விருப்பப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்திய பயணிகளில் 61 விழுக்காட்டினர் உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விரும்பினாலும், 25 விழுக்காட்டினர் இவ்வாண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் இரண்டையும் மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
பயணிகளின் விருப்பப் பட்டியலைப் பொறுத்தவரை, கோவா, மணாலிக்கு அடுத்தடுத்த நிலைகளில் துபாய், இமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லா, கேரளா ஆகியவை உள்ளன.
வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தமட்டில், மாலத்தீவுகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், இந்தோனீசியாவின் பாலித் தீவு, சுவிட்சர்லாந்து ஆகியவை இந்தியர்களின் விருப்பப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 37 விழுக்காட்டினர், தங்களுடைய துணைவியார் அல்லது காதலர்களுடன் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினர்.
மாறாக, 19 விழுக்காட்டினர் தங்களுடைய நெருங்கிய நண்பர்களுடனும் 16 விழுக்காட்டினர் தங்களுடைய குடும்பத்தாருடனும் பயணம் செய்ய விரும்புவதாகக் கூறினர். வேறொரு 12 விழுக்காட்டினர் தனியாக பயணம் செய்ய விரும்புகின்றனர்.
எஞ்சிய 16 விழுக்காட்டினர், குடும்பத்தாருடனோ, துணைவியாருடனோ, நண்பர்களுடனோ, தனியாகவோ பயணம் மேற்கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூறினர்.
பயணம் மேற்கொள்வதில் உற்சாகம் நிலவினாலும், கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பாதுகாப்புக்கும் தாங்கள் முக்கியத்துவம் அளிப்பதாக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 80 விழுக்காட்டினர் கருத்துரைத்தனர். கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதுகாப்பாக பயணம் செய்ய தங்களுக்கு உத்தரவாதம் கிடைப்பதாக அவர்கள் கூறினர்.