புதுடெல்லி: கொரோனா காலத்தில் சுமார் 1.47 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு, பிற நோய்களால் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
கிருமித்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டில் கொரோனா தொற்று 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கியதாகவும் 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதில் 76,508 பேர் சிறுவர்கள். 70,980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 24,405 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 19,623 குழந்தைகளும் குஜராத்தில் 14,770 குழந்தைகளும் தமிழகத்தில் 11,014 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளனர் என்று அந்த மனு தெரிவிக்கிறது.

