விபரீதம்; நபரின் தலை துண்டிப்பு
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதனப்பள்ளி அருகே வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின்போது ஊர் எல்லையில் உள்ள எல்லம்மா கோயிலுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடனுக்காக ஆடு ஒன்றை 35 வயது வாலிபர் சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் இருந்த சலபதி என்பவர், போதையில் இருந்ததால் நள்ளிரவு பலி கொடுக்கும் சம்பவத்தின்போது ஆடு என்று நினைத்து சுேரஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் வெட்டிவிட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காவல்துறை இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
பத்து வயது சிறுமி தப்பினார்
போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் கிணற்றில் வீசப்பட்ட சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 10 வயது சிறுமி சனிக்கிழமை மாலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வயல்வெளிப் பக்கம் சென்றபோது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். தன்னை காட்டிக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியைப் பிடித்து உயிர் தப்பியுள்ளார். அந்த கம்பியின் உதவியுடன் கிணற்றின் மேலேறி வந்த சிறுமி வீட்டில் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியைத் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்
புதுடெல்லி: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் 117 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடக்கும் எனவும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் பிப்ரவரி 16ல் குரு ரவிதாசின் பிறந்த நாள் வருவதால் அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்கள், பிப்ரவரி 10 முதல் 16 வரை உ.பி.யில் வாரணாசிக்கு புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இதனால், அவர்களால் வாக்குப் பதிவு செய்ய முடியாது. இதையொட்டி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உள்ளது.

