மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 48 நாட்களாக கொவிட்-19 தொற்று காரணமாக மாண்டவர்களில் 68 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற விவரத்தை அந்த மாநிலத்தின் மருத்துவக் கல்வி மற்றும் மருந்துத் துறை தெரிவித்து உள்ளது. எஞ்சிய 32 விழுக்காட்டினரில் சிலர் ஒரு தடுப்பூசியும் வேறு சிலர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டது. ஒட்டுமொத்தமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் நேற்று முன்தினம் (ஜனவரி 17) வரை 807 பேர் கொரோனா தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் இவர்கள். அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த 151 பேரில் 102 பேர் ஒரு கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளவில்லை. 49 பேர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
இந்த நிலவரத்தை விளக்கிய மாநில கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் ஓக், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது ஆபத்துக்குரியது என்பதை இந்த மரணங்கள் உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்தியாவில் நேற்றுக் காலை நிலவரப்படி ஒரேநாளில் 682 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து ஓமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை 8,891 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்று 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டது. திங்கட்கிழமை பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது சுமார் 20,000 குறைவு என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

