புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் மெய்நிகர் வாயிலாகக் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார். தொழில் செய்வதற்குத் தடையாக இருந்தவை தனது ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளதை அப்போது சுட்டிக்காட்டிய அவர், நிறுவன வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நிலையான, நம்பகமான வளர்ச்சி இருக்கும் என்பதால் முதலீடு செய்வதற்கு இதுவே தகுந்த நேரம் என உலகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
"உலகின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியாவை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர்கள் தொழில் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளனர். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அதை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக உள்ளனர்.
"'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய்நிகர் பணம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்," என மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.
'டாவோஸ் செயல்திட்ட மாநாடு' என்னும் இந்த மாநாடு ஐந்து நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

