இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரு இண்டிகோ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்திலிருந்து ஜனவரி 7ஆம் தேதி காலை 5 நிமிட இடைவெளியில், இரு இண்டிகோ விமானங்கள் புறப்பட்டன. பெங்களூரில் இருந்து கோல்கத்தாவுக்கு புறப்பட்ட 6E455 விமானமும் புவனேஸ்வருக்கு புறப்பட்ட 6E246 விமானமும் வானில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. நல்ல வேளையாக, விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இதன்மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து எந்தப் பதிவு நூலிலும் (logbook) பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய ஆணையமும் தகவல் வெளியிடவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் தலைவர் அருண் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இச்சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் தவறிழைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட இரு எமிரேட்ஸ் விமானங்கள் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தி வெளியாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் இந்தியாவில் நடைபெற்று இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.