24 மணி நேரத்தில் புதிதாக 3.17 லட்சம் பேருக்கு பாதிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கொவிட்-19 தொற்று புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
நேற்றுக் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
இது முந்தைய நாள் அளவைவிட 12 விழுக்காடு அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 491 பேர் மாண்டுவிட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 487,693 ஆகியது என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவில் இப்போது 1.924 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஓமிக்ரான் தொற்று காரணமாக மொத்தம் 9,287 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமிக்ரான் தொற்று நேற்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 3.63 விழுக்காடு கூடி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் குணமடைந்தோர் விகிதம் 93.69 விழுக்காடாகவும் உயிரிழந்தோர் விகிதம் 1.28 விழுக்காடாக வும் இருக்கிறது. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 7.338 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இதனிடையே, நாட்டில் 15 முதல் 18 வரை வயதுள்ள பதின்ம வயது சிறார்களில் பாதிப்பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்றும் இது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று என்றும் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார்.
இந்த நிலவரம் இளைய, இளமைத் தன்மையுடன் கூடிய இந்தியா, முன்னின்று வழிகாட்டுவதைப் போல் இருக்கிறது. இந்த வேகத்தை கட்டிக்காக்க வேண்டும்.
"கொவிட்-19ஐ துடைத்தொழிக்க தடுப்பூசி கட்டாயமானது. பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாமல் எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும்," என்று திரு மோடி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டால், புதிய உருமாறிய கிருமி எதுவும் தலையெடுக்கவில்லை என்றால் மார்ச் 11ஆம் தேதி கொவிட்-19 உச்சத்தைத் தொட்டு பிறகு குறையக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆய்வு சங்கத்தின் தொற்றுநோய் துறை வல்லுநர் சமிரான் பாண்டே தெரிவித்தார்.