புதுடெல்லி: குற்றவாளிகளை எடுப்பாகக் காட்டும் திரைப்படங்களைப் பார்த்து பார்த்து தாங்களும் அதேபோல ஆகவேண்டும் என்று முடிவு செய்த மூன்று சிறுவர்கள், ஆடவர் ஒருவரை கொலை செய்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் இந்திய தலைநகர் புதுடெல்லியில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
புதுடெல்லியில் உள்ள ஜகாங்கீர்புரி மருத்துவமனையில் கத்திக் குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஷிபு என்பவர் சிகிச்சையின்போதே மரணமடைந்துவிட்டார். அது பற்றி விசாரித்த அதிகாரிகள் அந்தக் கொலையில் மூன்று சிறுவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.
அந்த மூவரையும் பிடித்து விசாரித்தபோது, குண்டர்கும்பல் திரைப்படங்களைப் பார்த்து தாங்களும் அதுபோல் ஆக வேண்டும் என்று முடிவு செய்ததாக அவர்கள் கூறினர். ஒருவரைக் கொலை செய்து அதைக் காணொளி எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவு செய்யும் நோக்கத்தில் அவர்கள் 'பட்னாம் கேங்' என்ற ஒரு குண்டர் கும்பலை ஏற்படுத்தினார்கள்.
ஷிபு என்பவரை மடக்கி அவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து மாறி மாறி மூவரும் அவரைக் கத்தியால் குத்தினர்.
அந்த ஆடவர் சத்தம் போட்டதைக் கேட்டு பலரும் வந்துவிடுவார்கள் என்பதால் அவரை அப்படியேவிட்டுவிட்டு சிறுவர்கள் ஓடிவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இப்போது விசாரணைக் காவலில் இருக்கும் அந்த மூவரும் இதுபோன்ற மேலும் பல சம்பவங்களில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.