ரேணிகுண்டா: கணவரின் தலையோடு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டம் நரசாராவ்பேட்டையைச் சேர்ந்த வசுந்தரா, 50, என்பவர் கள்ளக்காதல் தொடர்பில் தன்னுடைய கணவரான ரவிச்சந்திரா, 53, என்பவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.
பிறகு தலையைத் துண்டித்து அதை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு ரத்தக்கரையோடு ஆட்டோ ஒன்றில் ஏறி காவல்நிலையத்திற்குச் சென்று அவர் சரணடைந்தார்.
அங்கு வசுந்தரா தெரிவித்தவற்றைக் கேட்டு அதிகாரிகள் பயந்துபோய் பையைத் திறந்து பார்த்தபோது அதில் மனித தலை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
தொடர்ந்து வசுந்தரா கைதானார். உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ரேணிகுண்டாவில் வசித்து வந்த ரவிச்சந்திரா-வசுந்தரா தம்பதிக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
ரவிச்சந்திராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உண்டு என்றும் இதனால் அவரை வசுந்தரா கொன்றுவிட்டார் என்றும் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.