இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள குடியிருப்புக் கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும்.
மகாராஷ்டிர மாநில அரசும் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோரின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.
அந்தக் குடியிருப்புக் கட்டடத்தில் இன்று சனிக்கிழமை காலை (ஜனவரி 22) பெரிய தீச்சம்பவம் ஒன்று ஏற்பட்டத்தில் எழுவர் உயிரிழந்தனர்; குறைந்தது 23 பேர் காயமுற்றனர்.
அந்த 20 மாடிக் கட்டடத்தின் 18வது மாடியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை தொலைக்காட்சிக் காணொளிகள் காட்டின.
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, பலர் தூங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் தீயில் சிக்கிக்கொள்வதில் இருந்து தப்பிக்க முடியாமல்போனதாக தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.