டெல்லியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த ஆளுநர் மறுப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் வார இறுதி அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அங்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் அமலில் உள்ள முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இரவு ஊரடங்கும் திரையரங்குகள், நிகழ்ச்சி அரங்குகள் உள்ளிட்ட வணிக அமைப்புகளில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
கர்நாடகாவில் வார இறுதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.
"எனினும், அனைத்து நாள்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். மேலும், முன்பே அறிவிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகளிலும் மாற்றங்கள் ஏதும் இல்லை.
"மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் ஐந்து விழுக்காட்டுக்கும் அதிகமாக பதிவாகும்போது இந்தக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வரக்கூடும்," என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் அசோக் தெரிவித்தார்.
பொதுமக்கள் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஜானேந்திரா எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம் புதிதாக சுமார் 48 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 323,000ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநில நிலவரம்
இதற்கிடையே, டெல்லியில் வார இறுதி நாள்களில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்த இயலாது என அம்மாநில ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முன்மொழிவை டெல்லி அரசு அவருக்கு அனுப்பி வைத்திருந்தது.
அதில், கடைகளைத் திறக்கவும் ஐம்பது விழுக்காடு ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் இயங்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆளுநர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வார இறுதியில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை அகற்ற இயலாது என்றும் அத்தியாவசியமற்ற கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்குவதற்கு மட்டும் ஆளுநர் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். தொற்று பாதிப்பு குறையும்போது இத்தகைய தளர்வுகளை அளிப்பதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க நிலவரம்
இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் அன்றாட தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது.
நேற்று முன்தினம், அங்கு புதிதாக 9,154 பேருக்கு கிருமி தொற்றி உள்ளது. 134,816 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.