புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தொற்றுப் பாதிப்பு இருப்பின், அவர்களைத் தனிமைப்படுத்த தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில்தான் தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. குறைந்தபட்சம் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகளைத் திருத்தி புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தத் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 337,704 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்களாக அன்றாட தொற்று எண்ணிக்கை முந்நூறாயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,903,731ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 10,050 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
தற்போது 2,113,365 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவே கடந்த 237 நாள்களில் ஆக அதிகமான எண்ணிக்கை.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 488 பேர் மாண்டனர். ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 488,884 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் இதுவரை 1.610 பில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.