லக்னோ: பிப்ரவரி 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து பலர் கட்சி மாறி வருகின்றனர்.
நாட்டிலேயே ஆகப்பெரிய மாநிலமாக இருப்பதால் உத்தரப்பிரதேச தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கட்சிவிட்டு கட்சி மாறும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
ஏற்ெகனவே பாஜகவில் இருந்து முக்கிய தலைகள் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த நிலையில் இந்தியாவின் மிக உயரமான மனிதரும் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
எட்டு அடி 2 அங்குலம் கொண்ட நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
தர்மேந்திர பிரதாப் சிங், 46, ஏற்கெனவே மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தைச் சேர்ந்த அவர், முதுகலைப் பட்டம் பெற்றவர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நண்பர் ஒருவருக்காக பிரசாரம் மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்திருந்தார்.

