நாடாளுமன்ற வளாகத்தில் 875 பேருக்கு தொற்றுப் பாதிப்பு
புதுடெல்லி: ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு இந்தியாவில் சமூகப் பரவலாக மாறியுள்ளது என இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது மத்திய சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.
இதன் கீழ் 38 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில்தான் கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஆளானவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அதன் மூலம் கொரோனா தொற்றின் எந்த வகையான பாதிப்பு என்பது கண்டறியப்படுகிறது.
இந்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பு குறித்து இந்த அமைப்பு மேற்கொண்ட அண்மைய ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு தற்போது சமூகப் பரவலாக மாறி உள்ளது என்றும் குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்தப் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது என்றும் கொரோனா மரபியல் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அண்மையில் ஐஎச்யு என்று குறிப்பிடப்படும் கொரோனா கிருமியின் புதிய வகைப் பாதிப்பும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்தப் புதிய வகை நாட்டில் வேகமாகப் பரவவில்லை. இதன் தாக்கமும் பாதிப்பும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது," என்று கொரோனா மரபியல் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில்
875 பேருக்குப் பாதிப்பு
இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் 271 பேர் மாநிலங்களவை செயலக ஊழியர்கள், அதிகாரிகள் ஆவர். மிக விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அப்போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே, நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக நிலவரம்
நாடு முழுவதும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஞாயி்ற்றுக்கிழமை அன்று அன்றாட தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவானது. நேற்று முன்தினம் புதிதாக 306,064 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. சனிக்கிழமையைவிட இது 31,000 ஆயிரம் குறைவாகும்.
கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சமாக 50,210 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வயது வந்தோரில் அனைவருக்கும் (100%) ஒரு தடுப்பூசியேனும் போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், சுமார் 85 விழுக்காட்டினருக்கு இரண்டாவது தடுப்பூசியும் சிறார்களில் 29 விழுக்காட்டினருக்கு முதல் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர நிலவரம்
மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் மேலும் 44 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். ஒரே நாளில் 40,805 பேருக்கு கிருமி தொற்றிஉள்ளது.

