புதுடெல்லி: இந்தியா, குடியரசு தின விழாவில் தனது ஆயுதப் பலத்தை பறைசாற்றியிருக்கிறது.
நாட்டின் 73வது குடியரசு தின விழா நேற்று டெல்லியிலும் மற்றும் மாநிலங்களின் தலைநகரங்களிலும் கோலாகலமாக நடைபெற்றது.
அதிபர் ராம்நாத் கோவிந்த், டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த அணிவகுப்பு டெல்லி ராஜபாதையிலிருந்து தொடங்கி இந்தியா கேட் வரை நடந்தது. இதில், 1965, 1971 போரில் பயன்படுத்திய டேங்குகள், தற்போதைய நவீன ஆயுதங்கள் இடம்பெற்றன.
சென்னை ஆவடியில் தயாரிக்கப் பட்ட 'எம்பிடி அர்ஜூன் எம்கே-1' டேங்குகள், சென்சுரியன் டேங்குகள், 'பிடி-76' டேங்குகள், ஏபிசி டோபாஸ் டேங்குகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எம்கே-1 பீரங்கியும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.
வான்குடை வீரர்கள் படை, ஜம்மு காஷ்மீர் காலாட்படையினர், எஸ்ஐகேஎச் காலாட்படையினர், அசாம் ரெஜிமெண்ட் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஒட்டகப்படை பிரிவினரும் அணிவகுத்துச் சென்றனர்.
இந்திய கடற்படையின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
எதிர்காலத்திற்காக மாற்றமடையும் விமானப்படை என்ற தலைப்பில் விமானப்படையும் அணிவகுத்துச் சென்றது.
குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் ராஜபாதை வழியாக அணிவகுத்து வந்தன.
நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கிருமிப் பரவல் காரணமாக வெளிநாட்டுத் தலைவர்கள் இம்முறை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வில்லை.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர் மோடி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்து அவர் வித்தியாசமாகக் காணப்பட்டார்.
அவர் அணிந்திருந்த தொப்பியில் உத்தரகாண்ட் மலரான பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டையும் மோடி தோளில் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் மோடி பங்கேற்றார்.

