பாட்னா: பீகாரில் ரயில்வே தேர்வு முறையைக் கண்டித்து மாணவர்கள், போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள், கயா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றுக்குத் தீ வைத்தனர்.
ரயில்வே துறையில் பணியில் அமர ஒரே ஒரு தேர்வு எழுத வேண்டிய நிலைதான் இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தத் துறை, திடீரென இரண்டாம் நிலைத் தேர்வும் எழுதவேண்டும் என்று அறிவித்தது.
இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ரயில் மறியலில் இறங்கினர். நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஜெகானாபாத்தில் நேற்று நடந்த ஒரு போராட்டத்தில் மாணவர்கள் பிரதமரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டனர். இதனையடுத்து அரசு, அந்தத் தேர்வை ரத்து செய்து மாணவர்களின் குறை தீர்க்க ஒரு குழுவும் அமைத்துள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபடக் கூடாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தவறு. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

