பெற்றோர்் கோரிக்கை வலுக்கிறது; மத்திய அரசு ஆலோசனை
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உச்சமடையும் சூழலில், மூடியுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தலைநகரில் உள்ள பெற்றோர் குழு, 1,600-க்கும் மேற்பட்ட பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்றை, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோசிடியாவைச் சந்தித்து அளித்தது.
அத்தகைய கோரிக்கைகள் வேறு சில மாநிலங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் பெற்றோர்களில் ஒரு பிரிவினர், இணையவழி வகுப்புகள் தொடரவேண்டும் என்று விரும்புகின்றனர். பள்ளிகளை மூடிவைப்பதால் மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் தாக்கம் மிகவும் மோசமானதாகச் சிலர் கூறுகின்றனர்.
அதுபற்றிக் கருத்துரைத்த மத்திய அரசாங்கம், பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரி வருவதால், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிப் பள்ளிகளை திறப்பதற்கான மாதிரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா, தேசிய நிபுணர் குழுவிடம் பள்ளிகளைப் பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தயாரித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் ஆனால் அவற்றைப் பின்பற்றுவது மாநில அரசுகளின் முடிவாக இருக்கும் என்றும் தெரிகிறது.
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜனவரி வரை பள்ளிகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழி வகுப்புகளும், அவ்வப்போது நேரடி வகுப்புகளும் நடைபெற்றாலும் ஒரு கல்வி ஆண்டாகப் பள்ளிகள் முழுமையாகச் செயல்படாதது மாணவர் சமுதாயத்துக்குப் பேரிழப்பு எனக் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 15 வயது முதலான குழந்தைகளுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இனிமேலும் பெற்றோர் அச்சப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

