புதுடெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு லட்சங்களில் பதிவாகி வருகிறது. வியாழக்கிழமை மட்டும் தினசரி பதிப்பு 2.55 லட்சமாக இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியச் சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகக் கவலை தெரிவித்தார்.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று குறைந்து வருவதாக அவர் கூறினார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இணையம் வழி, அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார் அவர். தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொதுச் சுகாதாரத்துறையின் தயார்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவில் நேற்றுப் புதிதாக 248,697 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும் 627 தொற்று மரணங்கள் பதிவாயின. அவர்களையும் சேர்த்து மொத்தம் 492,356 பேர் கொரோனா காரணமாக பலியாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

